Wednesday, April 23, 2014

அறிவோம் வரலாறு. நண்பர் Babu PK மூலமாக




இப்ப நான் ரெண்டு மூணு வரலாற்று மனிதர்களைப் பத்தி சொல்லப்போறேன். நேத்து திடீர்னு ஞாபகத்துக்கு வந்தாங்க... ஒரு இத்தாலிய புத்தகத்துல லேடி கொடிவாவைப் பத்தி பாத்தேன்.... (நல்லாக் கவனிங்க படிக்கலை... பாத்தேன்) அவங்களைப் பத்தி நெனச்சதுமே... எனக்கு அழகான நெஃப்ரடிடியும் ஞாபகத்துக்கு வந்தாங்க. நெஃப்ரடிடி வந்ததும், அவங்களோட வீட்டுக்காரரும் வந்துட்டாரு.

க்ளியோபாட்ராவும் ஞாபகத்துக்கு வந்தாங்க... ஆனா, அவங்களைப் பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சுருக்கும். இவங்களைப் பத்தி ரொம்பப் பேருக்கு தெரிஞ்சுருக்காதுல்ல அதான்... இவங்களை லேசா கோடி காட்டுறேன்.... கபால்னு புடிச்சுக்கோங்க....

முதலாவது, லேடி கடைவெ (Lady Godiva). பழைய ஆங்கிலத்தில் Godgifu அல்லது Godgyfu என்று அழைக்கப்படுவார். நாம இங்கே கொடிவான்னு சொல்லுவோம்.

அது பதினோராம் நூற்றாண்டு. இன்றைய ஐக்கிய சாம்ராஜ்யத்தின் அந்தக்காலத்தைய இடம்தான் மெர்சியா (Mercia). ஸ்கான்டினேவிய பகுதிகளில் இருந்து பிரிட்டானியாவை ஆக்கிரமித்த ஜெர்மானியக் குழுக்களான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவர்களின் ஒரு சாம்ராஜ்யம். இவர்களே தற்போதைய ஆங்கிலேயர்களின் முன்னோர்.

அக்காலகட்டத்தில் மெர்சியாவை ஆண்டவன்தான் லியோஃப்ரிக், ஏர்ல் ஆஃப் மெர்சியா (Leofric, Earl of Mercia). ஏர்ல் என்பது ஒரு உயர் பதவி. லியோஃப்ரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன். ஆனால் சற்றுக் கொடுங்கோலன். மக்கள் நலனை நினையாது கடுமையான வரிகளைச் சுமத்துவானாம்.

லேடி கொடிவாவோ மிகுந்த இரக்க குணம் உள்ளவள். தன் கணவன் மக்களை வரிகள் போட்டு வதைப்பது கண்டு பல முறை அவனுடன் வாதிட்டிருக்கின்றாள்... வரிகளைக் குறை, அதிகவரிகள் சுமத்தாதே என்று. அவன் கேட்கவே இல்லை. இவளும் விடுவதாக இல்லை.

ஒரு சமயம் இது காரணமா பெரிய விவாதம் போகவும், லியோஃப்ரிக்... சரி, நான் வரியைக் குறைக்கிறேன் ஆனா, அதுக்கு நீ உடம்புல ஒரு துணி கூட அணியாம நிர்வாணமா நகரத்து தெருக்களை குதிரையில சுத்தி வரனும். செய்வியான்னு கேக்க.

இவளும், கொஞ்சங்கூட யோசிக்காம சரி பண்றேன். ஆனா, அதுக்கப்புறம் இந்த மாதிரி செய்யக்கூடாதுன்னு வாக்கு வாங்கிக்கிட்டு... ஊர் மக்களுக்கெல்லாம் ஒரு அறிவிப்பு கொடுக்குறா. குறிப்பிட்ட தினத்தன்னைக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, ஜன்னல் கதவு எல்லாத்தையும் மூடிக்கிட்டு வீட்டுக்குள்ளேயேதான் இருக்கனும்னு.

அந்த நாள்ல, தன் உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம, தன்னோட நீண்ட கூந்தலை மட்டுமே மறைப்பாகக் கொண்டு, குதிரையில் ஒரே புறமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு நகரத்து தெருக்களை வலம் வந்தாளாம்.

பிற்பாடு இதன் காரணமா அதுக்கப்புறம் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு பெண்கள் குதிரையில் பயணிக்கும்போது ஒரேபுறமாக இரண்டு கால்களையும் போட்டு அமர்ந்து பயணிப்பதைத் தவிர்த்தாங்களாம். இந்தத் தியாகத்தின் காரணமா அவளோட கணவன் அதுக்கப்புறம் மக்களை கொடுமைப்படுத்தலையாம்.

ஆனா, அந்த மக்கள்ல... ஒரே ஒரு தையக்காரன், பேரு டாம் அவன் மட்டும் தன் வீட்டுக் கதவு ஓட்டை வழியா இந்த ராணியைப் பாத்துட்டான். அதுனால அவனுக்குப் பேரு, Peeping Tom. மறைந்து பார்க்கும் மோகப்பார்வை (Voyeurism)க்கு இவனைத்தான் முதல் உதாரணம் காட்டினார்கள்.

இது உண்மையல்ல வெறும் கதைன்னும் சொல்றாங்க. ஆனா, ராணி கொடிவா வாழ்ந்தது உண்மை. கொடிவா மூலமா ஒரு தியாக உணர்வும், டாம் மூலமா ஒரு உளவியல் அறிவும் உலகத்துக்கு தெரிய வந்துச்சு.

அடுத்து நெஃப்ரெட்டிரி (Nefretiti). எகிப்து சாம்ராஜ்யத்தின் பதினெட்டாம் வம்சத்தின் மிகப்பெரும் மன்னனான அகெனடன் (Akhenaten)ன் ராணிகளுள் ஒருவர். முழுப்பெயர் நெஃபர்னெஃபெராட்டன் நெஃப்ரெட்டிடி (Neferneferuaten Nefertiti).

எகிப்து மண்ணில் மிகப்பெரும் புரட்சிகளைச் செய்தவர்கள் இவர்கள் இருவரும். பலகடவுட்கொள்கைகள் பரவியிருந்த எகிப்தில் ஓரிறைக் கொள்கையைத் துணிந்து செயல்படுத்தியவர்கள்.

சரி, இதில் என்ன இருக்கு என்கிறீர்களா? எல்லாம் தெரிந்த வரலாறுதானே என்று சொன்னால், இந்த ராணியின் மார்பளவுச் சிலை ஒன்று நமக்குக் கிடைத்திருக்கின்றது. நீண்டகழுத்தும், வளைந்த புருவங்களும், சற்றே உயர்ந்த கன்ன எலும்புகளும், கூர்நாசியும், சிவந்த இதழ்கள் வெளிப்படுத்தும் மர்மப்புன்னகையும்... அடடா... மிக அழகான பெண்மணிதான்.

ஆனால், அவரது தலையையும் கவனிக்க மறந்து விடாதீர்கள். எகிப்திய தலை அலங்காரம் என்றுதான் எல்லோரும் நினைக்கின்றார்கள். நெப்ரெட்டிடியின் பிறப்பு குறித்து எவருக்கும் சரிவரத் தெரியவில்லை. யூகங்கள்தான் இருக்கின்றன.

மன்னரோ உலகின் முதல் தனிப்பெரும்ஆளுமை (First Individual) என்று போற்றப்படுகின்றார். மதரீதியாகப் புரட்சி செய்ததோடு மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வையோடும் அறிவியல் நுணுக்கத்தோடும் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர். சூரியனைக் குறித்து சற்று அறிந்து வைத்திருப்பவர். அதுவே உலகிற்கு சக்தி கொடுப்பதை உணர்ந்திருந்தவர்.

இவர்கள் இருவரின் தலையைப் பார்த்தால், இயல்புக்கு மாறாக சற்றே நீண்டிருப்பதைக் காணலாம். இது ஏதோ மரபணுப் பிழை என்றால், அவர்கள் அதிககாலம் உயிர்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே இவர்கள் இயல்பான மனிதர்களே அல்ல. வேற்றுக்கிரகவாசிகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மனிதக் கலவையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது.

Friday, April 4, 2014